Friday, November 21, 2025

வினா : விடைக்காகவா? விவாதிப்பதற்காகவா?

 இறைவன் இயேசுவில் அன்பிற்குரியவர்களே,

 இன்றைய இறைவார்த்தை வழிபாடானது வினா விடைக்காகவா விவாதிப்பதற்காகவா என்ற மைய சிந்தனையில் சிந்திக்க அழைப்பு தருகின்றது. 

 நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பலவிதமான வினாக்கள் நம்முடைய உள்ளத்தில் எழுப்புகின்றோம். ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும் அதைப் பற்றிய சரியான புரிதல்கள் வேண்டும் என்று எழுப்பக் கூடிய வினாக்களும் உண்டு, அதே வேளையில் விவாதிக்கப்பட வேண்டும், ஒருவரை சோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வினாக்கள் எழுப்புவதும் உண்டு. 

 இன்றைய நற்செய்தி வாசகத்தில், உயிர்த்தெழுதலை மறுக்கும் சதுசேயர் இயேசுவை நோக்கி கேள்வி எழுப்புகிறார். இம்மண்ணக வாழ்வின் உறவு நிலைகளை இறப்புக்கு பின் எவ்வாறு புரிந்து கொள்வது என்ற கேள்விக்கு இயேசு கிறிஸ்துவின் பதில் உயிர்ப்பின் வாழ்வைப் பற்றிய தெளிவான புரிதலை நமக்கு கொடுக்கின்றது. இம்மன்னக வாழ்வில் தான் நாம் உறவு நிலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். விண்ணக வாழ்வில் எந்தவிதமான உறவு நிறைகளும் அல்ல மாறாக அனைவருமே ஒரே நிலையில் தான் வாழப் போகின்றோம். அதுவும் வானத்தூதர்களைப் போல இருப்போம் என்ற கருத்தையும் முன் வைக்கிறார். ஆனால் சதுசேயர்களோ ஏற்க மனம் இல்லாத நிலையில்தான் இருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் விடைக்காக வினா எழுப்பவில்லை மாறாக விவாதிக்க வேண்டும், இயேசுவின் மீது ஏதேனும் குற்றம் சுமத்த வேண்டும் என்ற மனநிலையில் தான் இருந்தார்கள்.

 அன்பிற்குரியவர்களே, இன்று பல நேரங்களில் சதுசேயர்களைப் போலத்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்புவதை விட ஒருவரை சோதிக்க வேண்டும், விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும் என்ற மனநிலையில் தான் கேள்விகள் கேட்கக் கூடியவர்களாக இருக்கின்றோம். அவ்வாறு வாழக்கூடியவர்களாக இல்லாமல் கேள்வி கேட்பது ஒன்றை அறிந்து கொள்ளவும், ஒன்றைப் பற்றிய தெளிவு பெறவுமே என்பதை உணர்பவர்களாக திறந்த மனதுடையவர்களாக என்றும் வாழ்வோம் என்ற உறுதிபாட்டோடு இந்த நாளை இனிதே துவங்குவோம் ஆமென்




Thursday, November 20, 2025

எப்படிப்பட்ட இல்லமாக வைத்திருக்கிறோம்!

 இறைவன் இயேசுவில் அன்பிற்குரியவர்களே,

 இன்றைய இறைவார்த்தை வழிபாடானது எப்படிப்பட்ட இல்லமாக வைத்திருக்கின்றோம் என்ற மைய சிந்தனையில் சிந்திக்க அழைப்பு தருகின்றது. 

 இன்று நாம் வாழக்கூடிய இல்லத்தை அழகாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். நம்மை தேடி வரக்கூடிய உறவினர்கள், விருந்தினர்கள் அனைவரும் நம்முடைய இல்லத்தை குறித்து பாராட்ட வேண்டும், பெருமையாக பேச வேண்டும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நாம் இறைவனுடைய இல்லமாகிய ஆலயத்தை எவ்வாறு வைத்திருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில், எருசலேம் ஆலயத்தை நோக்கி வரக்கூடிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து அங்கு நடக்கும் அநியாய செயல்பாடுகளைப் பார்த்து அறச்சினம் கொண்டு எனது இல்லம் இறைவேண்டலின் வீடு என்று கூறி, அதைக் கள்வர்களின் குகையாக மாற்றாதீர்கள் என்று சொல்லி இல்லத்தின் தன்மையை எடுத்துக் கூறுகிறார்.

 அன்பிற்குரியவர்களே, இறைவேண்டுதலின் வீடாக இருக்கக்கூடிய ஆண்டவருடைய இல்லத்தில் இன்று நாம் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று சிந்தித்து பார்ப்போம். 

  • இன்று ஆலயத்தில் அமர்ந்து தான் பிறரைப் பற்றி தவறாகவும், குறைகள் கூறக்கூடியவர்களாகவும் இருக்கின்றோம். 
  • ஆலயத்தில்தான் ஒருவர் மற்றவர் மீது பொறாமை படக்கூடியவர்களாக இருக்கின்றோம்.
  • ஆலயத்தில்தான் முதன்மையான இடங்களை தேடுகின்றோம்.

 இந்த சிந்தனைகள் அனைத்தையும் நம்முடைய வாழ்விலிருந்து முழுவதுமாக அகற்றிவிட்டு இறையில்லம் என்பது இறை வேண்டலின் இல்லம், இறைவனோடு நாம் உரையாடும் இல்லம், இறைவன் நம்முடைய வாழ்வை குறித்து உணர்த்தும் இல்லம் என்பதனை உணர்ந்து, அதை பாதுகாக்க கூடியவர்களாகவும், பராமரிக்க கூடியவர்களாகவும் பயன்படுத்தக்கூடியவர்களாகவும் இருப்போம் என்ற உறுதிபாட்டோடு இந்த நாளை இனிதே துவங்குவோம் ஆமென்.



Wednesday, November 19, 2025

தேவைக்காக மாறலாமா!

 இறைவன் இயேசுவில் அன்பிற்குரியவர்களே,

 இன்றைய இறைவார்த்தை வழிபாடானது தேவைக்காக மாறலாமா என்ற மைய சிந்தனையில் சிந்திக்க அழைப்பு தருகின்றது. 

 இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் தேவையின் நிமித்தம் எவ்வித மாற்றத்தையும் நம்முடைய வாழ்வில் கொண்டுவர நாம் தயங்குவதில்லை. அவ்வாறு இருக்க தேவையின் நிமித்தம் மாற்றத்தை நோக்கிச் செல்வது தவறு என்பதனை இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

 மக்கபேயர் நூலில் இருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில், மன்னனின் ஆணைப்படி அவருடைய அலுவலர்கள் இஸ்ரயேல் மக்களை வேற்று தெய்வங்களுக்கு பலி செலுத்த கட்டாயப்படுத்தினார்கள். அந்நேரத்தில் அவர்கள் மத்தியில் வாழ்ந்த மத்தத்தியாவும் அவருடைய மைந்தர்களும் தனியாக பிரிந்து வந்து மன்னனின் ஆணைக்கு எதிராக இருந்தார்கள். மன்னனின் ஆணைக்கு இணங்கினால் அவர்களுக்குத் தேவையான பொருள் செல்வத்தையும், சிறப்பு பரிசுகளையும் பெறுவீர்கள் என்று மன்னனின் அலுவலர் சொல்லியும் அவர்கள் வழிபட்டு வந்த உண்மை தெய்வத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் நிமித்தம் தங்களின் மூதாதையர் வழிபட்டு வந்த நெறிமுறைகளிலிருந்து பிரள மாட்டோம் என்று உறுதியாக எடுத்துக் கூறுகிறார். அதேவேளையில் பலி செலுத்த கூடியவர்களையும் அழிக்க கூடியவராக மாறுகிறார். 

 அன்பிற்குரியவர்களே, இந்த இறைவார்த்தையில் இருந்து நமக்கு கொடுக்கக்கூடிய சிந்தனை தேவையின் நிமித்தம் எதையும் மாற்றிக் கொள்ளக் கூடியவர்களாக நாம் இருக்கக் கூடாது. எப்பொழுதும் நம்முடைய நிலையை அறிந்து அதே நிலையில் எந்நாளும் நிலைத்திருக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று நமக்கு எடுத்துக் கூறப்படுகின்றது. 

 இன்றைய சமூகத்தில், நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறுகள் என்று பார்த்தோம் என்றால்

  •  ஏதேனும் நோய்கள் ஏற்பட்டால் வேற்று தெய்வங்களை நோக்கி செல்வது.
  •  தீய பழக்கத்திலிருந்து விடுபட வேற்று தெய்வங்களின் பெயரால் கயிறுகளை கட்டுவது.
  •  பெயர்களை மாற்றி வைத்துக் கொண்டால் சலுகைகள் கிடைக்கும் என்று பார்ப்பது.

 இவ்வாறு இன்று நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் தேவையின் நிமித்தம் நம்முடைய நம்பிக்கையையும், அந்த நம்பிக்கை தரும் வாழ்வையும் மாற்றிக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றோம். அவ்வாறு இருக்கக் கூடாது என்பதனை இன்றைய இறைவார்த்தை மிகத் தெளிவாக நமக்கு எடுத்துக் கூறுகின்றது. 

 எனவே நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு தேவைகள் வந்தாலும் அனைத்திலும் நாம் கொண்டிருக்கக் கூடிய நம்பிக்கையில் என்னாலும் நிலைத்திருப்பவர்களாக வாழும் போது, நாம் நம்பும் உண்மை இறைவன் என்னாளும் நம்முடன் இருந்து நம்மை வழிநடத்துவார் என்று நம்பிக்கையோடு இந்த நாளை இனிதே துவங்குவோம் ஆமென்.



Tuesday, November 18, 2025

சரியாகப் பயன்படுத்துவோம்

 இறைவன் இயேசுவில் அன்பிற்குரியவர்களே,

 இன்றைய இறைவார்த்தை வழிபாடானது சரியாக பயன்படுத்துவோம் என்ற மைய சிந்தனையில் சிந்திக்க நமக்கு அழைப்பு தருகின்றது. 

 சரியாகப் பயன்படுத்த வேண்டுமா எதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நம்முடைய உள்ளத்தில் எழலாம். நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதர்களுக்கும் வாய்ப்புகள் என்பது கொடுக்கப்படுகின்றது. அந்த வாய்ப்புகளை ஒவ்வொரு மனிதர்களும் எவ்வாறு அறிந்து கொள்கின்றோம், ஏற்றுக்கொள்கின்றோம், ஏற்றுக்கொண்டதை எவ்வாறு செயல்படுத்துகின்றோம் என்பதனை குறித்து சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். 

 இன்றைய நற்செய்தி வாசகத்தில், உயர் குடிமகன் ஆட்சி உரிமை பெற்று வர தொலை நாட்டிற்கு செல்வதற்கு முன்பு தம் பணியாளர்கள் 10 பேரை அழைத்து பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து வாணிகம் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். பிறகு வந்தவுடன் தம் பணியாளர்களை அழைத்து எவ்வளவு ஈட்டி உள்ளார்கள் என்று பார்த்தார். பத்து வினாக்கள் மீட்டியுள்ளவருக்கு ஏற்ற உயர் பதவியும், ஐந்து மினாக்கள் ஈட்டி உள்ளவருக்கு ஏற்ற பதவியும், எதுவும் செய்யாமல் உள்ளதை உள்ளவாறு வைத்திருந்தவருக்கு ஏற்ற தண்டனையையும் கொடுத்தார். 

 அன்பிற்குரியவர்களே, இந்த உவமையின் வழியாக நாம் அறிந்து கொள்ள, கடவுள் ஒவ்வொரு மனிதர்களுக்கும் வாய்ப்புகளை கொடுத்திருக்கின்றார். அந்த வாய்ப்புகளை எவ்வளவு தூரம் ஒவ்வொருவருமே பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் ஒவ்வொரு நிலையாக வளர்ச்சி அடைகின்றோமா அல்லது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை எவ்விதத்திலும் பயன்படுத்தாமல் தவற விட்டுவிடுகிறோமா என்று சிந்தித்து பார்ப்போம். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் ஒவ்வொரு நிலையாக முன்னேறி செல்வோம் என்ற உறுதிபாட்டோடு இந்த நாளை இனிதே துவங்குவோம் ஆமென்.



Monday, November 17, 2025

இறங்கி நடப்போமா!

 இறைவன் இயேசுவில் அன்பிற்குரியவர்களே,

 இன்று தாய் திருஅவையோடு இணைந்து புனிதர்கள் பேதுரு, பவுல் பெருங்கோவில் நேர்ந்தளிப்பை நினைவு கூறுகிறோம். இவர்கள் இருவரும் ஆண்டவர் இயேசு கிறிஸ்தவக்காக எதையும் ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்று நமக்கு வாழ்ந்து காட்டியவர்கள். இருவருமே மறைசாட்சியாக மரித்தவர்கள். புனித பேதுரு கல்லறையின் மீது பேரரசர் கான்ஸ்டன்டைன் கி.பி 319 ஆம் ஆண்டு பேராலயம் ஒன்றை எழுப்பினார். புனித பவுலின் கல்லறையிலும் திருத்தந்தை பெரிய லியோவின் ஆசியோடு முதலாம் தியோடர் என்ற மன்னர் பேராலயத்தை கட்டினார். இப்பேராலயமோ 1833 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையாக சேதம் அடைந்தது. பின்னர் திருத்தந்தை பதினோராம் பத்திநாதருடைய காலத்தில் நிதி திரட்டப்பட்டு மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. இவர்கள் இருவருமே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் அவருடைய வார்த்தைகளையும் தங்களுடைய உள்ளத்தில் நிறுத்தி உடன் பயணித்தவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

 எனவே, இன்றைய விழாவும், இறைவார்த்தையும் இறங்கி நடப்போமா என்ற மைய சிந்தனையில் சிந்திக்க நமக்கு அழைப்பு தருகின்றது.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில், இறைவார்த்தையை அறிவித்த பிறகு சீடர்களை அக்கரைக்கு அனுப்பி வைத்த ஆண்டவர் கடல் மீது நடந்து வருவதை பார்த்து அச்சமடைகின்றார்கள். பிறகு ஆண்டவர் என்பதனை அறிந்து கொண்டு நானும் உன்னோடு வர கட்டளையிடும் என்று கேட்கக்கூடிய பேதுருவுக்கு ஆண்டவரும் அழைப்பு தருகின்றார். அந்த அழைப்பை ஏற்ற பேதுரு ஆண்டவரை நோக்கி நடக்கின்றார். கவனம் ஆண்டவரை நோக்கி இருக்கும் வரை அவர் கடலில் நடக்கின்றார். எப்பொழுது அந்த கவனம் கடல் மீது சென்றதோ அப்பொழுது மூழ்க தொடங்குகின்றார். பல நேரங்களில் நாமும் பேதுருவைப் போல ஆண்டவரோடு நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். ஆனால் நம்முடைய கவனம் மாறும்போது ஆண்டவரை மறந்து இவ்வுலக ஆசைகளில் மூழ்க தொடங்குகின்றோம்.

 அன்பிற்குரியவர்களே, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆண்டவரோடு நடக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களாக மட்டும் வாழாமல், அதற்காக முன்னெடுக்கக்கூடிய ஒவ்வொரு செயல்பாடுகளிலும் முழு கவனத்தையும் ஆண்டவரை நோக்கி வைக்க கூடியவர்களாகவும், அதே கவனத்தோடு பயணிக்க கூடியவர்களாகவும் இருப்போம் என்ற உறுதிபாட்டோடு இந்த நாளை இனிதே துவங்குவோம் ஆமென்.




Sunday, November 16, 2025

தடைகளை தகர்ப்போமா!

 இறைவன் இயேசுவில் அன்பிற்குரியவர்களே.

 இன்றைய இறைவார்த்தை வழிபாடானது தடைகளை தகர்ப்போமா என்ற மைய சிந்தனையில் சிந்திக்க நமக்கு அழைப்பு தருகின்றது. 

 வாழ்க்கை என்றால் அதில் பல தடைகள் இருக்கத்தான் செய்யும். அந்தத் தடைகளை தடங்கலாக பார்த்து, இருக்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கின்றோமா அல்லது தடைகளை தகர்த்தெறிந்து விட்டு முன்னேறி செல்கின்றோமா என்று நாம் ஒவ்வொருவருமே சிந்தித்து பார்ப்போம்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு எரிகோவை நெருங்கச் சென்றபோது பார்வையற்ற ஒருவர் இயேசு வருவதை அறிந்து, தாவீதின் மகனே என் மீது இறங்கும் என்று கத்துகின்றார். இதைக் கேட்ட யாவரும் அவனை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று விரும்பவில்லை, மாறாக அவனை அதட்ட கூடியவர்களாகவும், அவனை அமைதி படுத்தக் கூடியவர்களாகவும் தான் இருந்தார்கள். இருப்பினும் தன்னுடைய முயற்சிக்கு இத்தனை தடைகள் வந்தாலும் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு தொடர்ந்து கத்துகின்றார். அவருடைய குரல் கடவுளுடைய காதிற்கு எட்டியது. உடனே அவனை அழைத்து வரச் சொல்லி நம்பிக்கை நிமித்தம் நலம் தருகின்றார். 

 அன்பிற்குரியவர்களே,

 இன்று நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவரை நோக்கி நாம் குரல் எழுப்பும் போது பல தடைகளை சந்திக்க நேரிடும், அந்தத் தடைகளை தடங்கலாக பார்த்து, இருக்கும் இடத்திலேயே இருந்து விடாமல் பார்வையற்றவனை போல நாமும் தடைகளை தகர்த்தெறிந்த ஆண்டவரை நோக்கி குரலெழுத்துவோம். அவரும் நம்முடைய குரலைக் கேட்டு நம்முடைய வாழ்விற்கு தேவையானதை நிறைவாக கொடுத்த ஆசீர்வதிப்பார் என்ற சிந்தனையோடு இந்த நாளை இனிதே துவங்குவோம் ஆமென்.




Saturday, November 15, 2025

தயார் நிலையில் இருக்கின்றோமா?

 இறைவன் இயேசுவில் அன்பிற்குரியவர்களே,

 பொதுக்காலத்தின் இறுதி வாரத்தில் இருக்கக்கூடிய நாம், தயார் நிலையில் இருக்கின்றோமா என்ற மைய சிந்தனையில் சிந்திக்க இறைவார்த்தை நமக்கு அழைப்பு தருகின்றது.

 எதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற கேள்வி நம்முடைய உள்ளத்தில் எழலாம். இவ்வுலக வாழ்வு நிரந்தரமற்றது. நிலையான வாழ்வு கடவுளோடு இணைந்த நிலையில் இருப்பதே என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அந்த வாழ்வை நிறைவாக பெற வேண்டும் என்றால் இந்த உலகில் நாம் வாழக்கூடிய வாழ்வை எத்தகைய நிலையில் வாழ வேண்டும். எவ்வாறு நம்மை தயாரிக்க வேண்டும் என்பதனை இன்று இறைவார்த்தைகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

 இன்றைய முதல் வாசகம், கடவுளை மறந்து வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் 50 ஆண்டுகள் பாபிலோனியாவில் அடிமைகளாக இருந்தார்கள். அந்த நேரத்தில் கடவுளுடைய இரக்கத்தை வேண்டி குரல் எழுப்புகின்றார்கள் கடவுளும் அவர்களுக்கு விடுதலை கொடுக்கின்றார். இந்த சூழ்நிலையில் தான் மலாக்கி இறைவாக்கினர் அவர்களுடைய வாழ்வை இன்னும் நெறிப்படுத்த வேண்டும் என்று இறுதி நாள் தீர்ப்பை எடுத்துரைக்கிறார். 

 இரண்டாவது வாசகத்தில், ஆண்டவருடைய இரண்டாம் வருகை வரும் என்ற மனநிலையில் உழைக்காமல் சோம்பேறிகளாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களிடம், உழைக்க மனம் இல்லாதவன் உண்ணலாகாது என்று சொல்வதன் வழியாக, ஆண்டவருடைய வருகையை நினைத்து ஒவ்வொரு நாளும் நம்முடைய கடமைகளை சரிவர செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதனை தன்னுடைய வாழ்வின் செயல்பாடுகளின் வழியாக பவுல் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

 நற்செய்தி வாசகத்தில், நம்முடைய பார்வையில் அழகானதும் சிறந்ததும் என்று சொல்லப்படக்கூடிய அர்த்தமற்ற ஒவ்வொன்றுமே இறுதி நாளில் அழிவை நோக்கி செல்லும் என்பதனை எடுத்துக் கூறக்கூடிய ஆண்டவர் பலரும் என் பெயரால் உங்களை தவறான பாதையில் வழிநடத்தக் கூடிய சூழல் உருவாகும் கவனமாய் இருக்க எச்சரிக்கை தருகின்றார். அதே வேளையில் அந்த ஆண்டவரை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு வாழும் போது, நாமும் அன்றாட வாழ்க்கையில் பல விதமான துன்பங்களை சந்திக்க நேரிடும், எதிர்ப்புகளை எதிர்கொண்டாக நேரிடும் ஆனால் அனைத்து நிலையிலும் உறுதியோடு இறக்கும்போது நம்முடைய வாழ்வு காக்கப்படும் என்ற நம்பிக்கையை தருகின்றார்.

 அன்பிற்குரியவர்களே, இறுதி நாளை குறித்து எடுத்துக் கூறக்கூடிய இன்றைய வாசகங்களின் அடிப்படையில், இவ்வுலகில் அர்த்தமற்ற வாழ்வை அகற்றி அர்த்தமுள்ள வாழ்வாக மாற்றிட தேவையான தயார் நிலையை வாழ்வில் கொண்டு செயல்பட வேண்டும் என்ற உறுதிபாட்டோடு இந்த நாளை இனிதே துவங்குவோம் ஆமென்.




Friday, November 14, 2025

எதிலும் நிலைத்து நிற்போம்

 இறைவன் இயேசுவில் அன்பிற்குரியவர்களே,

 இன்றைய இறைவார்த்தை வழிபாடானது எதிலும் நிலைத்து நிற்போம் என்ற மைய சிந்தனையில் சிந்திக்க அழைப்பு தருகின்றது. 

 நம்முடைய மூதாதையர்கள் மிக அருமையாக சொல்வார்கள், வாழ்வில் எதுவும் எளிதாய் கிடைத்து விடாது, அவ்வாறு கிடைத்தால் அதனுடைய அருமை நமக்கு புரியாது என்று. இது நிதர்சனமான உண்மை. 

 இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறும் உவமையில் நேர்மையற்ற நடுவரிடம் நீதி கேட்டு வருகின்றார் கைம்பெண். நேர்மையற்ற நடுவர் என்று தெரிந்தும் அந்தப் பெண் விடாமுயற்சியோடு தனக்கு நீதி வேண்டும் என்று போராடக் கூடியவராக இருக்கின்றார். அதில் அவர் நிலைத்திருந்ததால் தான் அந்த நடுவரிடமிருந்து நீதியைப் பெற்றுக் கொண்டார். இவ்வாறு ஒன்றை பெற வேண்டும் என்றால் அதற்காக நாம் நிலைத்து நிற்கக் கூடியவர்களாகவும் தொடர்ந்து போராடக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர அழைக்கப்படுகின்றோம்.

 முதல் வாசகத்தில், இஸ்ரேல் மக்கள் எகிப்து அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற கடவுளை நோக்கி குரல் எழுப்பினார்கள். அந்த விடுதலைக்காக தொடர்ந்து கடவுளிடம் குரல் எழுப்பக் கூடியவர்களாக இருந்தார்கள். எனவே அவர்களுடைய வேதனையையும், அதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று நிலைத்து நிற்கக் கூடிய தன்மையை பார்த்து கடவுள் அவர்களுக்கு விடுதலை அளிக்கின்றார். அந்த நிகழ்வை தான் சாலமோனின் ஞான நூல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. 

 அன்பிற்குரியவர்களே, இன்றைய சமூகத்தில் ஒவ்வொரு பெற்றோர்களுமே தங்களுடைய பிள்ளைகள் விரும்பக்கூடிய ஒவ்வொன்றையும் கொடுத்து வளர்ப்பதனால், போராடக்கூடிய உள்ளமும், எதிலும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற மனநிலையும் இல்லாதவர்களாக வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். வாழ்வில் எல்லா நிலையிலும் ஒன்றை பெற வேண்டும் என்றால் அதற்காக போராட வேண்டும் அதில் நிலைத்திருக்க வேண்டும் என்பதனை இன்றைய இறைவார்த்தையின் அடிப்படையில் கற்றுக் கொடுக்கக் கூடியவர்களாக வாழ்வோம் என்ற சிந்தனையோடு இந்த நாளை இனிதே துவங்குவோம் ஆமென்.





Thursday, November 13, 2025

அறிந்து கொள்ளப் போகின்றோமா? அல்லது அறிவிலியாய் இருக்கப் போகின்றோமா?

 இறைவன் இயேசுவில் அன்பிற்குரியவர்களே,

 இன்றைய இறைவார்த்தை வழிபாடானது அறிந்து கொள்ள போகின்றோமா அல்லது அறிவிலியாய் இருக்கப் போகின்றோமா என்னும் மைய சிந்தனைகள் சிந்திக்க அழைப்பு தருகின்றது.

 மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதர்களும் ஏதோ ஒன்றை அறிந்து கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு அறியாமல் அறிவிலியாய் இருந்தோம் என்றால் எந்தவிதமான மதிப்பும் இன்றி, யாருக்கும் எந்த பயனும் இன்றி அர்த்தமற்ற வாழ்வாக அமையும் என்பதனை உணர்வோம்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில், இறுதி நாளை எடுத்துக் கூறக்கூடிய ஆண்டவர், பழைய ஏற்பாட்டின் இரு நிகழ்வுகளை மேற்கோள் காட்டுகிறார். நோவாவின் காலத்திலும், லோத்தின் காலத்திலும் மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய சிந்தனைக்கு ஏற்ப உண்டும் குடித்தும் மகிழ்ச்சியில் ஒழுக்க கேடான வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எனவே அவர்களுடைய தவறுதலுக்கான தண்டனையைப் பெற்றார்கள். ஆனால் அந்த தண்டனையிலிருந்து எவ்வாறு நோவாவும் லோத்தும் அவருடைய செயல்களின் நிமித்தம் காப்பாற்றப்பட்டார்களோ அவ்வாறு ஒழுக்கத்தோடு வாழக்கூடியவர்களுடைய வாழ்வு காப்பாற்றப்படும் என்று எடுத்துக் கூறுகிறார். 

 அத்தகைய நிலையில் நம்முடைய வாழ்வை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால், முதல் வாசகத்தில் சொல்லக்கூடிய அறிவிலிகளைப் போல நாம் வாழக்கூடாது. மாறாக இறைவனை அறிந்து கொள்ளக் கூடியவராகவும் அந்த இறைவன் காட்டக்கூடிய பாதையில் பயணிப்பதன் வழியாக வாழ்வைப் பற்றின சரியான புரிதல்களோடு தேவையானதை தேர்வு செய்து உண்மையோடும் நேர்மையோடும் வாழ வேண்டும் என்ற உறுதிபாட்டோடு இந்த நாளை இனிதே துவங்குவோம் ஆமென்.




Wednesday, November 12, 2025

எது இறையாட்சி

 இறைவன் இயேசுவில் அன்பிற்குரியவர்களே,

 இன்றைய இறைவார்த்தை வழிபாடானது எது இறையாட்சி என்ற மைய சிந்தனையில் சிந்திக்க நமக்கு அழைப்பு தருகின்றது. இறையாட்சி என்றால் இறைவனுடைய ஆட்சி, இறைவன் இவ்வுலகை ஆட்சி செய்வது என்றுதான் நாம் கூறுவோம். 

 இதன் அடிப்படையில் தான் இன்றைய நற்செய்தி வாசகத்திலும், இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர்கள் இயேசுவிடம் கேட்டனர். அதற்கு இயேசு, இறையாட்சி அங்கே இங்கே என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அது உங்கள் நடுவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு சொல்வதன் வழியாக இறையாட்சி என்பது நாம் பார்க்கக்கூடிய அரசர்களைப் போல கடவுள் அரண்மனையில் வீற்றிருந்து நம்மை ஆட்சி செய்வது அல்ல மாறாக இறை திருவுளத்தையும் விருப்பத்தையும் அறிந்து அதற்கேற்ப நெறிப்படுத்தப்பட்ட வாழ்வாக நம்முடைய வாழ்வை அமைத்துக் கொண்டு வாழ்வதே இறையாட்சி. அத்தகைய வாழ்வை எடுத்துக் கூறும் மானிட மகனாகிய இயேசு கிறிஸ்துவையும் எவ்வாறு உதறித் தள்ளுவார்கள் என்பதையும் எடுத்துக் கூறுகிறார். 

 இதை இன்றைய முதல் வாசகத்தோடு இணைத்து பார்த்தோம் என்றால், ஞானத்தோடு செயல்படக் கூடியவருடைய வாழ்வு எவ்வாறு நெறிப்படுத்தப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டு இருக்கும் என்பதனையும், அனைத்து துன்பங்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் வாழ்வில் உண்மையை வெளிப்படுத்தக் கூடியதாகவும், கடவுளுடைய ஆற்றலை முழுமையாக கொண்டு செயல்படக் கூடியதாகவும் இருக்கும் என்றும் எடுத்துக் கொள்கிறது. 

 அன்பிற்குரியவர்களே, இன்றைய முதல் வாசகம் எடுத்துக் கூறக்கூடிய ஞானத்தை நிறைவாகப் பெற்று நம்முடைய வாழ்வை நெறிப்படுத்தப்பட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்வாக அமைத்துக் கொள்வதன் வழியாக கடவுள் விரும்பும் இறையாட்சியை இம்மண்ணில் நிறுவக்கூடியவர்களாக, நம் மத்தியில் செயல்படுத்தக் கூடியவர்களாக இருப்போம் என்ற உறுதிபாட்டோடு இந்த நாளை இனிதே துவங்குவோம் ஆமென்.




Tuesday, November 11, 2025

நன்றி உணர்வோடு பயணிக்கின்றோமா?

 இறைவன் இயேசுவில் அன்பிற்குரியவர்களே,

 இன்றைய இறைவார்த்தை வழிபாடானது நன்றி உணர்வோடு பயணிக்கின்றோமா என்ற மைய சிந்தனையில் சிந்திக்க அழைப்பு தருகின்றது. 

 மனித வாழ்க்கை என்பது தனித்து வாழ்வது அல்ல, மாறாக பலரோடு இணைந்து குழுமமாக வாழ்வதுதான் மனித வாழ்வு. இவ்வாறு அந்த குழும வாழ்வில் ஒருவர் மற்றவருக்கு துணையாகவும், உதவக் கூடியவருமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவ்வாறு துணையாகவும் உதவியாகவும் இருப்பவர்களுக்கு எவ்வளவு தூரம் நன்றி உணர்வோடு செயல்படக் கூடியவர்களாக இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவினுடைய பயணத்தில் அவரை 10 தொழுநோயாளர்கள் எதிர்கொள்கின்றார்கள். தங்களுடைய நோய்களின் வேதனை ஒருபுறமும், குடும்பங்கள் உற்றார் உறவினர்களிடமிருந்து பிறந்து தனித்து வாழக்கூடிய வேதனை மறுபுறமும் இருக்க, தங்களுடைய நோய்களிலிருந்து முழுவதுமாக நலம் பெற வேண்டும் என்ற நம்பிக்கையோடு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிற்கு முன்பாக பணிந்து வேண்டிக் கொள்கின்றார்கள். இயேசு கிறிஸ்துவும் அவருடைய நம்பிக்கையின் நிமித்தம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நலம் தருகிறார். அவ்வாறு நலம் பெற்றவர்களுள் ஒரே ஒருவர் மட்டும்தான் இயேசுவை நோக்கி திரும்பி வந்து தான் பெற்ற நன்மையை நினைவுகூர்ந்து அவருக்கு நன்றி செலுத்துகிறார். மற்ற ஒன்பது பேரும் தேவையின் நிமித்தம் ஒருவரை தேடக்கூடியவராகவும், தேவை நிறைவடைந்த பிறகு பெற்ற நன்மைகளை மறந்து தங்களுடைய வாழ்வை மட்டும் சிந்தித்து செயல்படக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள்.

 அன்பிற்குரியவர்களே, இன்று நம்முடைய வாழ்க்கையில் அந்த நன்றி உணர்வோடு ஆண்டவரை தேடி திரும்பி வந்த அந்த நலம் பெற்று ஒருவரைப் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா அல்லது தேவையின் நிமித்தம் ஆண்டவரை தேடி வந்து நலம் பெற்ற பிறகு பெற்ற நன்மையை மறந்து தங்களுடைய வாழ்வை முன்னிலை நிறுத்திச் சென்ற அந்த ஒன்பது நபர்களைப் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா, சிந்திப்போம். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கடவுள் செய்த அற்புதங்களும் அதிசயங்களும் எண்ணில் அடங்காதவை, அதேவேளையில் இந்த சமூகத்தில் நம்முடன் இருக்க கூடிய ஒவ்வொருவருமே பல நேரங்களில் நமக்கு துணையாகவும் ஆதரவாகவும் உடனிருந்து கரம் பிடித்து வழி நடத்தி இருக்கின்றார்கள். அவ்வாறு நாம் பெற்ற ஒவ்வொரு நன்மைகளையும் மறந்தவர்களாக வாழாமல் எப்பொழுதும் நினைவு கூறக் கூடியவர்களாகவும், அதற்கு எப்பொழுதும் நன்றி உணர்வோடு செயல்படக் கூடியவர்களாகவும் இருப்போம் என்ற சிந்தனையோடு இந்த நாளை இனிதே துவங்கவோம் ஆமென்.




வினா : விடைக்காகவா? விவாதிப்பதற்காகவா?

 இறைவன் இயேசுவில் அன்பிற்குரியவர்களே,  இன்றைய இறைவார்த்தை வழிபாடானது வினா விடைக்காகவா விவாதிப்பதற்காகவா என்ற மைய சிந்தனையில் சிந்திக்க அழைப்...